ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் இன்று காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, உடல் நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமையினால், திங்கட்கிழமை முன்னிலையாவதாக அறிவித்திருந்தார்.
எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமசிறி பெர்னான்டோவிடம் குற்றப்புலனாய்வினர் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு அவரை கைது செய்ததாக ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
இவரைத் தொடர்ந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பூஜித ஜெயசுந்தரவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸ் மருத்துவமனைக்கு சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள, அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் பற்றித் தெரிந்திருந்தும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இருவரையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அறிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.