பாடசாலை விடுமுறையில் மாணவர்கள் பல்வேறு செயற்பாட்டில் ஈடுபடுவதனை நாம் அறிந்திருக்கின்றோம்.
பலரும் விடுமுறை என்றால் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனினும் கடந்த வருடம் பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை கிடைத்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சுற்றுலா செல்வதனையோ, கூடி விளையாடுவதனையோ தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே வவுனியா பண்டாரிகுளத்தில் வசிக்கும் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியரான ஜெயரட்னாவின் பிள்ளைகளான சாதுரியன் மற்றும் சாதுரியா கடந்த வருடம் இயற்கை பசளைகளை கொண்டு வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபட்டனர்.
அதிலும் சாதாரணமாக கத்தரி மிளகாய் என்பவற்றை விட இஞ்சி, மஞ்சல், இராசவள்ளி என்பவற்றை பயிரிட்டிருந்தனர்.
இந்த முயற்சிக்கு ஆசிரியரான தந்தை ஜெயரட்னா சிறு உதவிகளை வழங்கிய நிலையில் முழுமையான தமது ஆர்வத்தினால் இன்று இஞ்சி அறுவடையில் ஈடுபட்டிருந்தனர் இந்த மாணவர்கள்.
வீட்டுத்தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட ஒவ்வொரு இஞ்சியும் சுமார் 500 கிராமிற்கு அதிகமாக காணப்பட்டமையையிட்டு அவர்கள் ஆனந்தமடைந்திருந்தனர்.