பலாலி விமான நிலையத்தில் கட்டுப்பாட்டுக் கோபுரம்

யாழ். பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை (17.09) இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என சர்வதேச விமான ஒழுங்குபடுத்தல் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசுடன் உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், குறித்த உடன்படிக்கையில் இலங்கை சார்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கையொப்பம் இடுவார் என்றும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இரண்டு ஒப்புதல்களுக்குமான அமைச்சரவை பத்திரங்களை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.