பலாலி விமான நிலையத்திலிருந்து இந்திய அலையன்ஸ் எயார் நிறுவனம் தனது சேவையை ஆரம்பிக்கின்றது

ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவிற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள் பலாலி விமான நிலையத்திற்கான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதில் அலையன்ஸ் எயார் நிறுவனமும் ஒன்றாகும் என்று சிறிலங்கா சிவில் விமான சேவை அதிகார சபையின், விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா தெரிவித்துள்ளார்.

எயார் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயார் நிறுவனம், இந்தியாவில் 54 நகரங்களை இணைக்கும் வகையில் உள்நாட்டு விமான சேவைகளை நடத்தி வருகின்றது.

இந்த நிறுவனத்திடம், பலாலி விமான நிலையத்திற்கு இயக்கக்கூடிய, 70-72 ஆசனங்களைக் கொண்ட IATR  72 – 600 ரகத்தைச் சேர்ந்த 18 விமானங்களும் 48 ஆசனங்களைக் கொண்ட ஒரு ATR 42-320 விமானமும் உள்ளது.

2000ஆம் ஆண்டு இந்தியாவில் பா.ஜ.க அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்கள் கொழும்பிற்குப் பயணங்களை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் உதவியிருந்தது.

போயிங் B 737 மற்றும் எயார் பஸ் A320 விமானங்களை இயக்கக்கூடிய வகையில், இலங்கையின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க தற்போது பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலாலி விமான நிலையத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு முகவர் அமைப்புக்களான குடிவரவு மற்றும் சுங்கத் திணைக்களங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறுகிய கால அவகாசத்தில் பலாலியில் குடிவரவு மற்றும் சுங்க பணிகளை ஆரம்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி.ரத்நாயக்க தெரிவித்தார்.