பருவநிலை மாற்றம் பண்டைய சிந்து சமவெளி நாகரீகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாந்த் மாலிக் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வாளராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறித்த ஆய்வாளர், 5,700 ஆண்டுகளுக்கான தரவுகளை ஆய்வு செய்து வந்துள்ளார். பருவநிலை மாற்றம் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் அழிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளார். இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,
தெற்காசிய குகைகளின் பொங்கூசிப் பாறைக் கனிமப் படிவுகளில் ஒரு குறிப்பிட்ட வகை இரசாயன இருப்பின் அளவை கணக்கில் எடுத்துக் கொண்டோம். இதன் மூலம் கடந்த 5,700 ஆண்டுகளில் அப்பகுதியில் பருவமழையின் அளவு பற்றிய தொகுதியை உருவாக்க முடிந்தது. ஆனால் பண்டைய கால பருவநிலை காலத் தொடரை இப்போதைய கணித மாதிரிகளில் கண்டுபிடித்து புரிந்து கொள்வது சவாலான பணியாக இருந்தது.
பகுப்பாய்வின்படி இந்து நாகரீகம் உதயமாவதற்கு சற்று முன், பருவநிலையில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. இந்த நாகரீகம் வீழ்ச்சியடைவதற்கு முன்பாக இந்த பருவநிலை மாற்ற வகை மாதிரி தலைகீழ் மாற்றம் அடைந்துள்ளது. இதனால் தான் பருவநிலை மாற்றமே சிந்து சமவெளி மாற்றத்திற்குக் காரணமாக நாங்கள் கூறுகிறோம். ஆனால் இதை உறுதியாக நிரூபிக்க இன்னும் தரவுகளும், ஆய்வு மாதிரிகளும் தேவை என்றும் கூறினார்.
இதேவேளை சிந்து சமவெளி நாகரீகம் ஏன் அழிந்தது என்பதற்கு இந்தோ – ஆரியர்கள் என்ற நாடோடிகளின் ஊடுருவலே காரணம் என்பது உட்பட பல கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றன. பூகம்பமும் ஒரு காரணமாக சொல்லப்பட்டன. ஆனால் பருவநிலை மாற்றம் அதன் அழிவிற்குக் காரணமாக இருக்கலாம் என்று இந்தக் கண்டுபிடிப்பு, அந்தக் கோட்பாட்டு ஆய்வுகளின் வரிசையில் தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.