பதவி நீக்க விசாரணையில் ஆவேசமாகி இழிவான வார்த்தைகளை பிரயோகித்த அமெரிக்க அதிபர்

இந்த வாரம் தன் பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயன்படுத்தியுள்ளார்.

தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக ஜனநாயக கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்பாக விசாரித்து வரும் குழுக்கள் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளன.

இழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சித் தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த ட்ரம்ப் அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தினார்.

ஆனால் இந்த விசாரணை நடப்பதை நியாயப்படுத்தியுள்ள ஜனநாயக கட்சியினர், நிச்சயம் ஒரு நேர்மையான நடைமுறையில் விசாரணை நடைபெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர்.

usa1 பதவி நீக்க விசாரணையில் ஆவேசமாகி இழிவான வார்த்தைகளை பிரயோகித்த அமெரிக்க அதிபர்பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ட்ரம்ப், இந்தக் குற்றச்சாட்டில் ட்ரம்ப் பழிவாங்கியதாக கூறப்பட்ட முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவரையும் முழுமையான ஊழல் பேர்வழிகள் என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த விசாரணை தொடர்பான புலனாய்வுக் குழு தலைவர் அடம் ஸ்கிஃப் மீது தனது கோபத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். மிகவும் கீழ்த்தரமானவர் என்றும், அவமதிப்பு நடத்தையால் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் ஸ்கிஃப் குறித்து ட்ரம்ப் கூறினார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் அளித்தவரின் வார்த்தைகளை ஏற்று ஸ்கிஃப் இந்த விசாரணை அறிக்கையை தயாரித்ததாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் ட்ரம்ப் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் செய்ததைத் தொடர்ந்தே  இந்த சர்ச்சை எழுந்தது.

இவர்கள் இருவரும் தொலைபேசியில் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை. ஆனால் அதிபர் ட்ரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்ட் ஆகிய இருவர் மீதும் உக்ரேன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டிற்கு அளித்து வரும் இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தி விடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் ட்ரம்ப் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் ட்ரம்ப் ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை “குப்பை“ என்று வர்ணித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே கூறப்படுகின்றது.

கடந்த ஜுலையில் ஆபிரிக்க – அமெரிக்க வழக்கறிஞர் குறித்து ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று, ஒருவரை இன ரீதியிலாக தாக்குவது என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி குற்றம் சாட்டினார்.

ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான எலியா க்யூமிங்க்ஸ் மற்றும் அவரின் மேரிலாண்ட் மாவட்டம் குறித்து ட்ரம்ப் ருவிற்றரில் பதிவிட்டார்.

கறுப்பின மக்களை அதிகமாக கொண்ட க்யூமிங்க்ஸின் பால்டிமோர் மாவட்டத்தை எலிகள் மிகுந்த அழுக்கான ஒரு பகுதி என ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சித்திருந்த க்யூமிங்க்ஸ் பிறரை கொடுமைப்படுத்துபவர் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பின்படி 50 சதவீதத்திற்கும் அதிகமான கறுப்பின மக்கள் வாழும் மாவட்டம் குறித்து ட்ரம்ப் பேசிய இன ரீதியிலான தாக்குதல் என சபாநாயகர் நான்சி பெலோசி குற்றம் சுமத்தினார்.