நைஜீரிய அரச குடும்பத்தில் 344 வருடங்கள் வாழ்ந்த ஆமை உயிரிழந்தது

தங்களுக்குச் சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நலக் குறைவின் காரணமாக இறந்து விட்டதாக நைஜீரியாவில் உள்ள அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது.

வயதானது என்னும் அர்த்தம் கொண்ட “அலக்பா“ என்றழைக்கப்பட்ட அந்த ஆமை நைஜீரியாவின் ஒயோ மாநிலத்தில் ஒக்போமோசோ அரண்மனையில் வாழ்ந்து வந்தது.

மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே உண்ணும் இந்தப் பெண் ஆமையை பார்த்துக் கொள்வதற்கு மட்டுமே இரண்டு வேலையாட்கள் இருந்தனர்.

இந்த ஆமைக்கு நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் இருப்பதாகக் கருதப்பட்டதால், அந்நாட்டின் தொலைதூர பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிடுவது வழக்கம்.

1770 முதல் 1797 வரை ஆட்சி செய்த ராஜ்ஜியத்தின் மூன்றாவது தலைவரான இசான் ஒகுமாய்டே என்பவரால் இந்த ஆமை அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டது.

ஒகுமாய்டேவின் காலத்தில் அரண்மனைக்குக் கொண்டு வரப்படும் போதே அலக்பாவுக்கு 100 வயதிற்கு மேல் இருந்திருக்கும் எனக் கருதப்படுகின்றது. இதேவேளை, இந்த ஆமையின் வயது விவகாரத்தில் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

பிரிஸ்டல் மிருகக் காட்சி சாலையின் ஊர்வனவற்றின் கண்காணிப்பாளரான டிம் ஸ்கெல்டன், அலக்பா இவ்வளவு நீண்ட காலம் வாழ்ந்திருப்பது சாத்தியமற்றது என்றார்.