நெதர்லாந்து – பிரான்ஸ் நாடுகளுடன் இலங்கை ஒப்பந்தம்

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நெதர்லாந்தின் விற்றல் ஏசியா என்ற நிறுவனத்துடன் பெற்றோல் இறக்குமதிக்கான உடன்பாட்டை மேற்கொண்டுள்ள இலங்கை அரசு கடல் பகுதியில் எண்ணைக் கசிவை கண்டறியும் தொழில்நுட்ப உடன்பாட்டை பிரான்ஸ் நாட்டுடன் மேற்கொண்டுள்ளது.

இந்த மாதத்தில் இருந்து எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலுமான எரிபொருள் வினியோகத்திற்கு இலங்கை அரசு நெதர்லாந்தின் நிறுவனத்தை தெரிவுசெய்துள்ளது. நான்கு நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்பியபோதும் இலங்கை அரசு இந்த நிறுவனத்தை தெரிவுசெய்துள்ளது.

இதனிடையே, செய்மதிகள் மூலம் இலங்கை கடற்பரப்பை கண்காணித்து கப்பல்களில் இருந்து எண்ணைக்கசிவுகள் ஏற்பட்டால் அதனை கண்டறிவதற்கான தொழில்நுட்ப உடன்பாடு ஒன்று பிரான்ஸ் மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் சூழல் பாதுகாப்பு அமைப்பிற்கும் பிரான்ஸ் அரசுக்குமிடையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு அண்மையில் பிரான்ஸ் அதிபர் திடீரென வந்து சென்ற பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.