நீதித்துறை சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம் – நிரோஷ்

தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் எவற்றுக்கும் நீதியை வழங்கத்தக்க சுயாதீன பொறிமுறைகள் உள்நாட்டில் இல்லை என்ற யதார்த்தத்தினை வெளியுலகிற்கு உணர்த்துவதற்கும் நீதித்துறையின் சுதந்திரத்தினைக் காப்பதற்கும் நாம் ஒன்றுதிரண்டு போராட வேண்டியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக கோப்பாயில் இடம்பெற்ற துண்டுப்பிரசார நிகழ்வில் பங்கேற்று கருத்துரைக்கும்; போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், நீதித்துறைச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. அச்சுதந்திரம் அண்மைய நாட்களில் வலுவாக மீறப்பட்டு வந்துளளது. குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று இடத்தினை பௌத்த சிங்கள மயமாக்குவதற்கு அரச திணைக்கமான தொல்லில் திணைக்களம் மற்றும் இராணுவம் பொலிஸ் போன்றவற்றின் அரச ஒத்துழைப்புடன் இனவாத நிகழ்ச்சித்திட்டம் நடைபெறுகின்றது. இதன்போது மக்களின் நீதியை உறுதிப்படுத்திய நீதிபதியைமிகவும்  நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்புக்களே உதாசீனம் செய்யப்பட்டதுடன் அரசியல் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.  கௌரவ நீதிபதி ரி.கணேசராஜா அவர்கள் அடிப்படையில் இனம் மதம் மொழி கடந்து நீதியை நிலைநட்டுவதற்காக உழைத்தபோது அவர் நாட்டில் வாழமுடியாமல் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் சட்டவாக்கத்திற்குப் பொறுப்பான பாரளுமன்றில் உறுப்பினர்களுக்குக் காணப்படும் சிறப்புரிமையினை பயனபடுத்தி சரத் வீரசேகர போன்றோர் தமிழ் நீதிபதி என அவரையும் நிதித்துறையினையும் அச்சுறுத்தினர். மீயுயர் சபையில் நீதிபதிகளை பகிரங்கமாக இனவாதிகள் எச்சரித்தனர். உண்மையில் பாராளுமன்ற சிறப்புரிமை ஊழல்களை அல்லது மக்கள் சார்பாக கருத்துச் சுதந்திரத்தினை வலுப்படுத்தும் நோக்கம் உடையது. அதனை வெறுமனே நீதித்துறையினை அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை வியப்புடையதாகும்.

இந்நிலையில் நாளை நடைபெவுள்ள போராட்டத்தில் கைகோர்ப்பது காலத்தின் தேவை என  தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.