நாங்கள் ஒரு பலமுள்ள அணியாக பாராளுமன்றத்திறகு செல்லவேண்டும்; மட்டக்களப்பில் சுமந்திரன்

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய இருப்பை பாதுகாக்கவும் அரசியல் தீர்வை பெறவும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் கட்டியெழுப்பவும் கூடிய விதத்தில் நாங்கள் செயற்படவேண்டுமானால் நாங்கள் ஒரு அணியாக ஒரு பலமுள்ள அணியாக பாராளுமன்றத்திறகு செல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்று மாலை மட்டக்களப்பு தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா உட்பட மட்டக்களப்பு வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன், சட்டத்தரணி ந.கமல்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆகஸ்ட் 05ம் திகதி நடைபெற இருக்கின்ற தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,தேர்தல் பரப்புரைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், தேர்தல் நாளிலும், வாக்குகள் எண்ணும் நேரங்களிலும் புதிய நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படும்,பரப்புரைக் காலத்தில் கூட்டங்கள் நடத்துவதற்கான வரையறைகள் மற்றும் கூட்டங்கள் நடத்த முடியாத சூழ்நிலைகளில் எவ்வாறு தங்கள் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் மக்களை வாக்களிப்பதற்கு உற்சாகப்படுத்தல், அதே போன்று தேர்தல் நாளில் சமூக இடைவெளிகளைப் பேணுதல், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல்,அத்தகு சுற்றாடலில் மக்கள் வாக்களிக்கும் முறை,மக்களின் தயக்கம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் விதிறைகளை மீறுகின்றவர்கள் சம்மந்தமாகவும்,அது தொடர்பிலான முறைப்பாடுகளை மேற்கொள்வது சம்மந்தமாகவும்,தேர்தல் அலுவலகங்களை அமைப்பது சம்மந்தமாகவும் இங்கு மேலதிகமாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன்

கிழக்கு மாகாணத்திலே இரண்டு தேர்தல் மாவட்டங்களுக்கு நாங்கள் சென்று வேட்பாளர்களோடு சந்திப்புகளை நாங்கள் நடத்தியிருக்கின்றோம். ஆகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவிருக்கின்ற தேர்தலில் எந்த விதத்தில் நாங்கள் நடந்துகொள்ள வேண்டும்,எப்படியாக பரப்புரைகளை செய்ய வேண்டும்,தேர்தல் தினத்திலும் வாக்குகள் எண்ணப்படுகின்றபோதும் புதிய நடைமுறைகள் எப்படியாக பின்பற்றப்படும்,அதில் நாங்கள் மாற்றி செயற்படவேண்டிய பல விடயங்கள் பற்றி விவரமாக நாங்கள் பேசியிருக்கின்றோம்.

பரப்புரை காலத்தில் கூட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக பல வரையறைகள் இருக்கின்றன. கூட்டங்களை நடத்த முடியாத பல சூழ்நிலைகள் இருக்கின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி மக்கள் மத்தியில் எங்களுடைய கொள்கைகளை தொடர்ச்சியாக நாங்கள் பரப்ப முடியும்,மக்களை வாக்களிப்பதற்கு உற்சாகப்படுத்த முடியும் போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

தேர்தல் நாளில் சமூக இடைவெளியை பேணுதல்ääசுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல்,அந்த சுற்றாடலில் மக்கள் வாக்களிக்கின்ற முறை,மக்கள் வாக்களிக்க முன்வருதல்,தயக்கம் காட்டுதல் போன்ற விடயங்களை நாங்கள் சேர்ந்து பேசியிருக்கின்றோம்.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் செய்வது சம்பந்தமாக ,தேர்தல் அலுவலகங்கள் அமைப்பது சம்பந்தமாக,வேட்பாளர்களுக்குத் தேவையான மற்றைய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடல் செய்திருக்கின்றோம்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவாரியாக வெற்றியைப் பெற வேண்டும், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழலை மையமாக வைத்து இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய இருப்பை பாதுகாக்கவும் அரசியல் தீர்வை பெறவும் எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் கட்டியெழுப்பவும் கூடிய விதத்தில் நாங்கள் செயற்பட வேண்டுமானால் நாங்கள் ஒரு அணியாக ஒரு பலமுள்ள அணியாக நாங்கள் பாராளுமன்றத்திறகு செல்ல வேண்டும் என்பது நாங்கள் மக்களுக்குச் சொல்கின்ற செய்தியாக இருக்கின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்று அணி என்று கூறி ஒவ்வொருவரும் ஆசனத்தை கைப்பற்றிச் செல்வது எந்த விதத்திலும் எமது மக்களுக்கு நன்மை பயக்காது. விஷேடமாக நாடு முழுவதிலும் வித்தியாசமானதொரு ஆட்சி முறையொன்றை அமைக்கத் தொடங்குவது எங்களுக்குத் தெரிகின்றது.

விஷேடமாக கிழக்கில் இது குறித்த கரிசனை எழுந்திருக்கின்றது. தொல்லியல் சம்பந்தமாக ஒரு செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் இராணுவ ஆட்சி வெளிப்படையாகவே மேலோங்கியிருக்கின்றது. இப்படியானதொரு சூழ்நிலையிலே அவர்கள் தேர்தலிலே வெல்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் எங்களுடைய பிரதேசங்களில் நாங்கள் அதற்கு எதிராக ஜனநாயகத்திற்காக எங்களுடைய மக்களின் இருப்பிற்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுக்கின்ற ஒரு அணியாக இருக்க வேண்டும். அதிலே எங்களுடைய ஒற்றுமை பேணப்பட வேண்டும்.

ஆகையால் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் இருந்து ஒரு அணி ஒரு நிலைப்பாடோடு பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும். அதை எங்களுடைய மக்கள் உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமோக ஆதரவை கொடுக்க வேண்டும். அது குறித்த பரப்புரைகளை சுகாதார சவால்கள் நிறைந்த இந்த சூழ்நிலையில்கூட மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு மக்கள் மத்தியில் அந்த கருத்துக்களை நாங்கள் கொண்டு செல்வோமென்று நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லையென்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவருகின்றது.இது உண்மைக்கு புறம்பான பரப்புரையாகும்.ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய நாலரை வருடகாலப்பகுதியில் முக்கியமான பல விடயங்கள் செய்யப்பட்டுள்ளன.அதனை நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லுவோம்.

ஒவ்வொரு கிராமத்திலும் என்னன்ன செய்யப்பட்டது,என்னன்ன விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்பது தொடர்பில் மக்களுக்கு தெரியும்.நாலரை வருடங்கள் அந்த ஆட்யுடன் இணைந்துசெயற்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.ஒரு அரசியல் தீர்வு ஒரு பிரதானமான காரணமாக இருந்தது.அதிலும் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டது.ஒரு நகல் வரைவு ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமளவுக்கு அதில் முன்னேற்றமிருந்தது.துரதிர்ஸ்டவசமாக நிறைவேற்றப்படவில்லை.அதுமுடிந்த காரியமல்ல.அதில் ஏற்பட்ட முன்னேற்றத்தினை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்.அதிலும் வெற்றிகாண்போம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பொருளாதாரம் தொடர்பில் அவர்கள் வாழும் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் பல முக்கியமான பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன.எந்த விடயமும் முழுமையாக நடந்துமுடியவில்லையென்பது உண்மை.ஆனால் எதுவுமே நடக்கவில்லையென்பது பாரியதொரு பொய் பிரச்சாரம்.அதனை முற்றாக மறுக்கின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தமிழ் மக்கள் பலமாக இருக்கவேண்டியதன் தேவையினை இன்னும் வலியுறுத்தியுள்ளது.நாட்டில் பலமான எதிர்க்கட்சியொன்று இருக்கும்போதுதான் ஆட்சியாளர்களை சரியான பாதையில் நடாத்தமுடியும்.அதனைசெய்யமுடியாத தோற்றம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது.அவ்வாறான நிலையில் நாங்கள் அந்த பங்களிப்பினை செய்யவேண்டிய தேவையும் ஏற்படலாம்.

விசேடமாக எண்ணிகையில் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு எதிரான செயற்பாடு வெளிப்படையாகவே இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.இந்த சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஒற்றுமையாக ஒரு அணியாக செயற்படவேண்டும்.வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் ஒரு அணியாக செல்வோம்.அ:தேபோன்று மலையகத்தில் உள்ள பிரதிநிதிகளும் ஒரு அணியாக பாராளுமன்றம் வரவேண்டும். இதேபோன்று தமிழ் பேசும் முஸ்லிம் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இணைந்துசெயற்படவேண்டும்.பேரினவாதம் என்பது ஒரு அணியில் நின்று மற்றவர்களை ஒடுக்குகின்ற ஒரு மனப்பாங்குடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது 2011ஆம் ஆண்டு 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம்.அரசாங்கத்துடன்தான் நாங்கள்பேச்சுவார்த்தை நடாத்தவேண்டும்.எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்து நாங்கள் ஒரு தீர்வினையும் காணமுடியாது.புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக நாங்கள் அவர்களின் ஆதரவினைப்பெறுவதற்காக பேசமுடியும்.பிரதானமாக ஆட்சியில் இருக்கின்றவர்களுடன்தான் பேச்சுவார்த்தை நடாத்தவேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் புதிய ஜனாதிபதி ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது புதிய அரசியலமைப்பு தேவையென்பதை சொல்லியிருந்தார்.எதற்காக தேவையென்பதற்கு நான்கு காரணங்களை சொல்லியிருந்தார்.அவற்றில் மூன்று காரணங்கள் நாங்கள் சொல்லியிருந்த காரணங்கள்.கடந்த ஆட்சிக்காலத்தில் எதற்காக புதிய அரசியலமைப்பு தேவையென செயற்பட்டமோ அந்த மூன்று காரணங்களையும் அவர் மீண்டும் சொல்லியிருக்கின்றார்.

புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குகின்றபோது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.தமிழ் மக்களின் அபிலாசைகள் பூரணமாக நிறைவேற்றப்படுகின்ற ஒரு வரைபு ஒன்றினை செய்யமுடியுமாகவிருந்தால் அந்த அரசாங்கத்துடன் அது குறித்துபேசி புதிய அரசியலமைப்புக்கான ஆதரவினையும் வழங்க தயாராகயிருக்கின்றோம்.

சிங்கள மக்களின் நம்பிக்கையினைப்பெற்ற அணியென்ற வகையில் அவர்களினால் அதனை செய்யமுடியுமாகயிருக்கலாம்.இதில்முக்கியமாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் முற்றுமுழுதாக உள்வாங்கப்படவேண்டும்.

நாங்கள் எந்த முயற்சியை செய்யும்போதும் ஒரு நம்பிக்கையுடன்தான் செய்கின்றோம்.யுத்த நாயகன் என்று மகிந்த ராஜபக்ஸ சிங்கள மக்களின் நம்பிக்கையினைப்பெற்றவர் என்ற வகையில் அவர் தங்களுக்கு தீங்கிழைக்கமாட்டார் என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது.தமிழ்மக்களுக்கான தீர்வினை மகிந்தவினால் வழங்கமுடியும். செய்யக்கூடிய மனப்பாங்கு அவருக்கு இருக்கின்றதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சிங்கள மக்களின் நம்பிக்கையினை முழுமையாக பெற்றவர் மகிந்தராஜபக்ஸ.அவர்களுடன் நாங்கள் பேசுவோம்.இந்த நாடு ஒரே நாடாக இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகின்றார்கள்.ஒரே நாடாக இருக்கவேண்டுமானால் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை முழுமையாக நம்பி வாழவேண்டும்.அதற்கான சூழ்நிலைஉருவாக்கப்படவேண்டும். அதற்கேற்றாற்போல் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.