இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயல்பாடுகளை நவீனமயப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப செயற்திட்டங்கள், இன்று வியாழக்கிழமை (30) பிற்பகல் 02.00 மணிக்கு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.
சுங்க நடவடிக்கைகளில் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நவீனமயமாக்கலை மேம்படுத்தும் நோக்கில் சரக்கு பரிமாற்ற கண்காணிப்பு முறைமை, சுங்க பணம் அனுப்பும் இணைய நுழைவாயில், மின்னணு கப்பல் சேவை கட்டண முறைமை போன்ற புதிய சேவைகள் இதன்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.



