நல்லூர் ஆலயத்துக்கு தன்னியக்க சோதனைச் கருவிகள்

நல்லூர் ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களின் உடற்சோதனை நடவடிக்கைகளை இலகுப் படுத்துவதற்காக 4 இயந்திர வழி உபகரணங்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

“நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. அடியவர்கள் பாதுகாப்புப் பிரிவினரால் சோதனை செய்யப்பட்ட பின்னரே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது பக்தர்களுக்கு சற்று சஞ்சலமாக இருப்பதை அறியமுடிகின்றது. ஆனாலும், பாதுகாப்பு முக்கியம். அதனால் இந்த நடவடிக்கைளை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளை இலகுவாக்கும் நோக்கில் 4 விசேட சோதனை இயந்திரங்கள்  விரைவில் அங்கு பொருத்தப்படவுள்ளன. அதாவது ஆலயத்துக்கு வரும் அடியவர்களை மறித்து தனியாக சோதனை செய்வதைத் தவிர்த்து, வாசலில் பொருத்தப்படும் இந்த இயந்திரத்தின் வாயிலாக உள்நுழையும்போது அது தன்னியக்க சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலமாக பக்தர்களின் சஞ்சலம் சற்று குறையும். இந்த வேலையை மாநகர சபை அல்லது ஆலய நிர்வாகம் செய்திருக்கலாம் ஆனாலும் , நாம் செய்கின்றோம் என்றார்.