வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II) – பாகம் -3
ஐ-அமெரிக்க தலையீடுகளின் நீண்ட வரலாறு – பாகம்-3
கிரேக்கம் 1947-1950: ஜனநாயகத்தின் பிறப்பிடம் அடியாள் நாடாக
1944ம் ஆண்டின் பிற்பகுதியில், ஜேர்மன் படை கிரேக்க நாட்டைவிட்டு துரத்தப்பட்ட பின்னர், பிரித்தானிய படை அங்கு வந்து இறங்கியது. ஜேர்மன் படை கிரேக்கத்தின் ‘மக்கள் விடுதலை படை’ இனது பெரும் உதவியுடனேயே துரத்தப்பட்டது. ம.வி.ப இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ம.வி.ப இல் கிரேக்கத்தின் இடதுசாரி மக்கள், பல கத்தோலிக்க பாதிரியார்கள் உட்பட, பலவகையினரும் சேர்ந்திருந்தனர்.
ம.வி.ப தம்முடன் சேராதவர்களை கட்டாயப்படுத்துவதில் மிகவும் கடும்போக்கு உள்ளவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்களின் விடுதலைச் செயற்பாடுகள் கிரேக்கத்தின் பழைமையான போக்குகளை உடைத்து முற்போக்கானவற்றை புகுத்துவதில் முன்னின்றன. உள்ளுர் மக்கள் குழுமங்கள் உருவாகி அதற்கான கட்டமைப்புக்களும் உருவாகின. இவை ஒரு புதிய கிரேக்கத்திற்கு வழிவகுத்திருக்கும். இதில் பெண்கள் படைகள், குடும்பப்பெண்கள் முதல்முறையாக தமது கணவரின் கட்டுப்பாட்டை உடைத்து தன்னிச்சையாக செயற்படும் தன்மை போன்றவைகளும் இருந்தன. ம.வி.ப தாக்கம் வளர்ந்து 7 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு மில்லியன் மக்கள் இதன் உறுப்பினர்களாக இருந்தனர்.
பிரித்தானியாவுக்கு இது பொறுக்க முடியாததொன்று. வந்திறங்கிய பிரித்தானிய படை ம.வி.ப ஐ அழிப்பதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்கியது. ஜேர்மன் படையோடு சேர்ந்திருந்தவர்களை கொண்டு ஒரு அரசை உருவாக்கியது. ம.வி.ப உறுப்பினர்ளோ சிறையில் அடைக்கப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். இதே ம.வி.ப பிரித்தானிய படைகள் வந்து இறங்கிய போது ‘வீரமான பிரித்தானிய படையை நாம் வரவேற்கிறோம்…’ என்பன போன்ற கோசங்களை எழுப்பியது. பிரித்தானிய படைக்கும் ம.வி.ப க்கும் போர் நடந்தது. ஜேர்மன் படையுடன் நின்ற கிரேக்கர்களும் இப்போது பிரித்தானிய படையுடன் நின்று ம.வி.ப க்கு எதிராக போரிட்டார்கள். இவர்களுக்கு ஐ-அமெரிக்காவின் விமானப்படை, கடற்படைகளின் உதவியும் வந்து சேர்ந்தது.
ஒரு வருடத்திற்குள், ஜனவரி 1945.ல், ம.வி.ப போர்நிறுத்தம் கோரியது. இவர்கள் இராணுவ தோல்வியடைந்தார்களா அல்லது சோவித் ஒன்றியத்தின் ஸ்டாலினின் கட்டளைக்கு அடிபணிந்தார்களா என்பது விவாதத்திற்கானது. 1944 இல் பிரித்தானியாவின் பிரதமர் சர்ச்சில் க்கும் ஸ்டாலின் க்கும் உருவான ஒப்பந்தத்ததை பார்க்கும் போது மேலே குறிப்பிட்ட இரண்டாவது காரணம் இதனோடு ஒத்துப் போகிறது. இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு ஐரோப்பாவை இவர்கள் இருவரும் தமது செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதாக பங்கு போட்டிருக்கிறார்கள். இதன்படி கிரேக்கம் பிரித்தானியாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் சர்ச்சில் இது பற்றி ‘பல கிழமைகளாக ஏதன்ஸ் நகரத்தில் கம்யுனிஸ்டுகளுடன் நடந்த போரின் போது ஸ்டாலின் இந்த உடன்படிக்கையிலிருந்து வழுவாமல் முழுக்கமுழுக்க ஒத்து நடந்தார். பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு சொல்லுக்கூட சோவித் ஒன்றியத்திலிருந்து வரவில்லை’ என்று சொன்னார்.
பிற்கால கிரேக்க வழமைபோல மாறிமாறி பல ஊழல் மலிந்த அரசாங்கங்கள் பிரித்தானியாவுக்கும் ஐ-அமெரிக்காவுக்கும் சேவை செய்ய வந்து போயின. இவை இடதுசாரிகளை பயமுறுத்தியும் சித்திரவதை செய்தும் இழிவான தீவு சிறைகளில் போட்டும் வதைத்தன. போரால் நலிவடைந்த கிரேக்க மக்களுக்காக இவ்வரசாங்கங்கள் எதுவும் செய்யவில்லை.
1946 இல் தவிர்க்க முடியாதது நடந்தது. ஸ்டாலினின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட இடதுசாரிகள் மலைப்பிரதேசத்தில் கூடி மீண்டும் உள்நாட்டு போரை ஆரம்பித்தனர். இதை கையாள வளங்கள் இல்லாத பிரித்தானியா பொறுப்பை ஐ-அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. சில நாட்களுக்கு உள்ளாகவே ஐ-அமெரிக்கா கிரேக்க தூதரை அழைத்து கிரேக்கம் ஐ-அமெரிக்காவிடம் உதவி கேட்டு கடிதம் எழுத வேண்டும் என்று சொல்லியது.
அனுப்ப வேண்டிய கடிதத்தையும் எழுதிக் கொடுத்தது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கிரேக்க அரசுக்கு உதவுவது ஐ-அமெரிக்காவிலிருந்து கம்யூனிஸ எதிர்ப்பாளர்களுக்கே பொறுக்கவில்லை. ஒரு ஐ-அமெரிக்கா ஊடகவியலாளர் பின்வருமாறு எழுதினார்: ‘கிரேக்க அரசியல்வாதிகளுக்கு ஐ-அமெரிக்காவின் தயவில் தாராள-பொருளாதரத்தில் வரும் சந்தோசங்களை பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு எந்த உயரிய நோக்கம் இல்லை.’
ஐ-அமெரிக்கவின் புதிய நடவடிக்கையின் அடிப்படையில் இராணுவ உதவிகள் வந்து குவிந்தன. விரைவில் கிரேக்க இராணுவம் முழுமையாக, இராணுவ உடைகள் உணவு உட்பட, ஐ-அமெரிக்க உதவியுடன் இயங்கியது. நாட்டின் போர் வலிமை முழுமையாக மாற்றமடைந்தது.
கிரேக்க இடதுசாரிகள் மூன்று வருடங்கள் தாக்குப் பிடித்தனர். பல ஆயிரம் இழப்புகள் வந்த போதும் அவர்களால் புதிய போராளிகளை இணைக்க முடிந்தது. சில சமயங்களில் இன்னும் அதிகமாக இணைக்க முடிந்தது. ஆனால் அக்டோபர் 1949 இல், தம்மைவிட பலமான இராணுவத்திற்கு எதிராக உயிரிழப்புக்களை தவிர வேறு எதையும் அடைய முடியாது என்று கண்ட போராளிகள், போர்நிறுத்தத்தை ரேடியோ மூலம் அறிவித்தார்கள். இதுவே போரின் முடிவாகியது.
1947 இன் பின் ஐ-அமெரிக்கா கிரேக்க நாடடின் மிது செலுத்திய தீவிர தாக்கம் மிகைப்படுத்த முடியாததொன்று. தொடந்த பல வருடங்களில் ஐ-அமெரிக்காவின் செயற்பாடுகளின் தாக்கத்தால் கிரேக்க அரசாங்கம் அடிக்கடி மாறியது. 1964 இல் ஆட்சிக்கு வந்த கிரேக்க அரசு கிரேக்கம் சுதந்திர தனித்துவ நாடு என்பது போல் செயற்பட விளைந்த போது அது எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பதை பின்னர் பார்ப்போம்.
பாகம் -4 தொடரும்