தோப்பூர் பகுதியில் ஆயுத பயிற்சி முகாம்; விசாரணையில் புதிய தகவல்கள்

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹ்ரான் புத்தளம் பிரதேசத்தில் சில குழுக்களுக்கு ஆயுத பயிற்சிகளும், கருத்தரங்குகளையும் நடத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கடந்த வருடம் இடம்பெற்ற உயித்த ஞாயிறுயன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல் குறித்த விசாரனைகளில் தற்போதைய நிலைமை குறித்து விபரித்த அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிய தளத்திற்கு வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட இடம் ஒன்று, ஒரு வருடத்துக்கு பின்னர் கண்டறியப்பட்டுள்ளது. புத்தளத்தை மையப்படுத்தி இயங்கிய அமைப்பொன்று தொடர்பில் தகவல்கள் கிடைத்துளளன.

குறித்த அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, அந்த இடத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்குள் அவர்களை ஈடுபடுத்தும் விதமான போதனைகள் நடாத்தப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரானும் குண்டுத் தாக்குதலை நடாத்திய மேலும் சில குண்டுதாரிகளும் அவர்களுக்கான அடிப்படைவாத போதனைகளை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தோப்பூர் பகுதி ஆயுத பயிற்சி முகாமில் துப்பாக்கி செயன்முறை பயிற்சி ஊடாக போதிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ள சிலருக்கு பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்த காட்சிகள், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்கள் வீடியோ வடிவில் காண்பிக்கப்பட்டும் அடிப்படைவாத சிந்தனை தூபமிடப்பட்டுள்ளதாகவும் இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போது தடுப்புக்காவலில் உள்ள அராபி பாடசாலையில் தங்கியிருந்த 14 வயதான மத்ரஸா மாணவன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த மாணவன் உள்ளிட்ட சந்தேக நபர்களை இந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது மாணவன் பயிற்சி வழங்க்கப்பட்ட இடத்தை காட்டியுள்ளார். ஆனால் அங்கு தற்போது புதிதாக கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதினால் இதனை உறுதி செய்வதில் பிரச்சினையிருப்பதாகவும் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.