தேர்தலில் போட்டியிட விரும்பினால் விலகிக்கொள்கிறோம் புதிய கட்சிகளை உருவாக்காதீர்கள் என்கிறார் ஜி.ரி.லிங்கநாதன்

தேர்தலில் போட்டியிட விரும்பினால் நாங்கள் விலகிக்கொள்கின்றோம். அதற்காக தற்போதைய நிலையில் புதிய கட்சிகளை உருவாக்குவது எமக்கு ஆபத்தானது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயிலின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றுகையில்,

சாள்ஸ் நிர்மலநாதனை விட வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்து ஆலயங்களிற்கு உதவி செய்வதாக நான் நம்பவில்லை.

ஆனாலும் இம்முறை தேர்தலை இலக்காக கொண்டு இந்துக்கள் சார்பாக ஒரு அணியும், கிறிஸ்தவர்கள் சார்பாக ஒரு அணியும் உருவெடுத்திருக்கிறது. நாங்கள் ஏற்கனவே தமிழ் பேசும் மக்களாக இருந்து மதத்தால் பிரிந்திருக்கிறோம். இன்னுமொரு மதத்தாலும் பிரிவோமேயானால் இந்த நாட்டில் இரண்டாவது இனமகாக அல்ல நான்காவது, ஐந்தாவது இனமாக இந்துக்களும், தமிழர்களும் வந்துவிடுவோம்.

ஆபத்தை உணர்ந்தவர்களாக நாம் மாத்திரம் அல்ல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு பின்னர் வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு உறவினர்களுக்கு உள்ளே பிரிவுகள் ஏற்பட்டு பல கட்சிகள் உருவாகின்ற நிலைமை காணப்பட்டு கொண்டு இருக்கின்றது. தயவுசெய்து இவ்வாறான வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

நீங்கள் தேர்தலில் ஈடுபடப்போகின்றீர்களே ஆனால் கூறுங்கள் நாங்கள் விலகிக்கொள்கின்றோம். ஆனால் புதிது புதிதாக கட்சிகளை உருவாக்கி மக்களை பிரித்து எமது இனத்தை சிறு கூறுகளாக்கி விடாதீர்கள். ஏற்கனவே பௌத்த சிங்கள வாக்குகளை நம்பி ஒரு ஜனாதிபதி வந்திருக்கிறார். அவர் தற்போது தனக்கு பெரும்பான்மையை கேட்டு நிற்கின்றார்.

அவர் சிறுபான்மை இனத்தை பற்றி சிந்திப்பதாக இல்லை. இவ்வாறான நிலையில் நாங்கள் மத ரீதியாக பிளவுபடும் போது பௌத்த சிங்களம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுத்தால் நாங்கள் இங்கு வாழ்வதா இல்லை என்கின்ற மிகப்பெரிய ஐயப்பாடு உருவாகும்.

ஆகவே புதிதாக உருவாகின்ற கட்சிகளும், அதை உருவாக்குபவர்களும் தற்போது உள்ள காலத்தை உணர்ந்து மீண்டும் ஒரு முறை சிந்தித்து செயற்படுங்கள் என்பதையே நாங்கள் கோரி நிற்கின்றோம் என தெரிவித்தார்.