தேர்தலில் போட்டியிட பிள்ளையானுக்கு நீதிமன்றம் அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிள்ளையான் தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ.சூசைதாஸ் இன்று கட்டளையிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண மதலமைச்சருமான சந்திரகாந்தன் உட்பட 5வேரை சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சி.சந்திரகாந்தன் சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியைக் கோரியிருந்தார். இதனையடுத்து இன்று சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வழக்கை எடுத்துக் கொண்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையான காலத்திற்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கியதுடன் இந்த வேட்புமனுத் தாக்குதலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும், அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.