தென் கொரியாவில் தஞ்சம் கோரியவர்களின் பட்டியலில் இந்தியர்கள்

இந்தாண்டு தென் கொரியாவில் 6000 வெளிநாட்டினர் தஞ்சம் கோரியிருந்த நிலையில், 164 வெளிநாட்டினரின் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டவர்களில் முதன்மையான இடத்தில் ரஷ்யர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் எகிப்து, கசக்கஸ்தான், மலேசியா, மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

1994 முதல் ஐ.நா. அகதிகள் சாசனத்தின் கீழ் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்களை ஏற்றுவந்த தென் கொரியா, 2013-ல் தென் கொரியாவுக்கான பிரத்யேக அகதிகள் சட்டத்தை உருவாக்கியது.

ஆசிய கண்டத்தில் தனக்கென ஓர் அகதிகள் சட்டத்தை கொண்டு வந்த முதல் நாடாக தென் கொரியா விளங்கி வரும் நிலையில், இச்சட்டத்தின் தொடர்ச்சியாக அங்கு தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதில் அதிகபட்சமாக 2018ல் 16,173 வெளிநாட்டினர் அங்கு தஞ்சம் கோரியிருந்தனர்.

அதே சமயம், வட கொரியாவிலிருந்து வெளியேறி தென்கொரியாவில் தஞ்சமடைபவர்கள் அங்கு தஞ்சக்கோரிக்கையாளர்களாக கருதப்படுவதில்லை. அவர்களுக்கு அந்நாட்டில் மிக விரைவாக தென்கொரியாவின் குடியுரிமை வழங்கப்படுகிறது.