திருமலை படுகொலை படையினர் விடுவிப்பு ;மனித உரிமை அமைப்புகள் விசனம்

திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள பின்னணியில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தாருடன் ஐநா மனித உரிமை பேரவை நீதிக்காக முன்நிற்கும் என மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நீதி அமைப்பில் சாட்சியங்களுக்கான பாதுகாப்பு இல்லாமையானது, திரிகோணமலையில் ஐந்து மாணவர்களின் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் விடுதலை செய்யப்பட்டமை எடுத்துக்காட்டுகின்றது என அம்னெஸ்டி இன்டர்நெஷனல் அமைப்பின் தெற்காசிய கிளை குறிப்பிடுகின்றது.

முக்கிய சாட்சியங்களும், பாதிக்கப்பட்டவர்களும் முன்வந்து சாட்சியங்களை வழங்குவதற்கு போதுமான பாதுகாப்பை உணரவில்லை என்பது உண்மை என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை, மிக மோசமான மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையிலும் இந்த விடயம் பாரிய சவால்களை இலங்கைக்கு விடுத்திருந்தது.