திருமலையில் 5 படகுகளுக்கு தீ வைப்பு – மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இறால்குழி பிரதேசத்தில் உள்ள நன்னீ எனும் இடத்தில் நேற்று (03) இரவு 5 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு படகு காணாமல் போயுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நன்னீ பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபடும் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மணல் அகழ்வு மற்றும் விற்பனை தொடர்பான முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என தமது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து எரியூட்டல் சம்பந்தமாக மணல் அகழும் குழுக்களிடையே மோதல்கள் அதிகரிக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் திருகோணமலை நகரில் இருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு நன்னீ மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் படகுகள் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.