தமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; மாவை அறிக்கை

“வடக்கு- கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்கவேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்கவேண்டுமென வற்புறுத்துகிறோம்.” என 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நேற்றைய முழு அடைப்புப்போராட்டத்தின் நிறைவில் அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம் வருமாறு:-

‘‘இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும்தம் உயிர் நீத்துள்ளனர். இன்னும் நாம் விடுதலை பெறவில்லை.

இவ் வரலாற்றுக் காலத்திம் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தும் ஈமக்கடனியற்றியும் கண்ணீர்விட்டழுதும் ஆறுதல் பெறுவது தமிழ் உறவுகள், தமிழ் மக்களின் பாரம்பரியம். இவை தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகமாகும். உலகில் இத்தகைய மனிதாபிமானக் கடமைகள் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும்.

உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வரும் நிலைமை தான் இருக்கின்றது. மனித குலம், தமிழ் உறவுகள் தம்உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டழுது சாந்தி பெறும் இயல் உணர்வுகளைக் கூட, மனிதாபிமானக் கடமைகளைக் கூட இன்றைய கோட்டாபய அரசு மறுத்து வருகிறது.

இன்று வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்களில் எல்லாம் உறவுகளை நினைவு கூருவோருக்கு எமக்கும் பெயரிட்டு எதிராக முறையற்ற வழக்குகளைப் பதிவு செய்து தடையுத்தரவுகளை காவல்துறையினர் வழங்குகின்றனர். வடக்கு-கிழக்கு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்களுட்பட நூற்றுக்கணக்கானவர்கள் தடையுத்தரவின் பேரில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அரசின், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அடிப்படையுரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும்,மனிதாபிமான கடமைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஐ.நா. சாசனஉடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும்.”