தமிழ் அரசு கட்சி பொதுச் செயலர் தெரிவு இன்று – திருமலையில் மத்திய குழு பரபரப்பாக கூடுகிறது

இலங்கை தமிழ் அரசு கட்சியில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளன. திருகோணமலையில் நடைபெறும் கட்சியின் மத்திய குழு – பொதுச் சபைக்
கூட்டத்திலேயே இந்தத் தெரிவுகள் நடைபெறவுள்ளன.

திருகோணமலை – உப்புவெளி – பீச் ஹோட்டலில் மத்திய குழு கூட்டம் நடைபெறும் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சியின் புதிய தலைவர் சி.சிறீதரன் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசனை பொதுச் செயலராக நியமிக்க விரும்புகிறார் என்று அறிய வருகின்றது.

இதேநேரம், வடக்கை சேர்ந்த குலநாயகம் உள் ளிட்ட கட்சியின் மேலும் 5 பேர் பொதுச் செயலர் பதவியை கோருவதற்கு தயாராகி வருகின்றனர் என்றும் அறிய வருகின்றது. இதேநேரம், திருகோணமலை அல்லது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு பொதுச் செயலர் பதவியை வழங்குமாறும் அழுத்தம் பிரயோகிக்படுகின்றது.

பொதுச் செயலர் பதவி நியமனத்தில் தீர்வு எட்டப்படாதவிடத்தில் பொதுச் சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதேநேரம், இம்முறை கட்சியின் நிர்வாகக்குழு முழுமையாக மாற்றப்படும் என்று அறியவருகின்றது. அத்துடன், திருமதி சசிகலா ரவிராஜூக்கும் கட்சியில் முக்கிய பதவி ஒன்றை அளிக்கத் தீர்மானிக்க ப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.