தமிழ்நாடு: இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி நகர் பகுதியிலுள்ள அகதிகள் முகாமில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில் அங்கு வசிப்போரின்எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் அரசு சார்பில் உதவித்தொகையும், அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் அங்குள்ள பலருக்கும் கரோனா தொற்று பரவியது. அருகே உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இலங்கை அகதிகள் கூறும்போது, “10-க்கு 10 அளவுள்ள ஓர் அறையில் 4 முதல் 6 பேர் தங்க வேண்டியுள்ளது. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டுவாழ்கிறோம். தங்குவதற்கு கூடுதல் கட்டிட வசதி இல்லாததால், அருகே உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது” என்றனர் என தி இந்து தமிழ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.