தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் த.தே. கூட்டமைப்பிடம் கிடையாதாம் – மஹிந்த

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப் படவில்லை என்றும் அரசியல் பழிவாங்கல்களே இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு  நேற்று பத்தர முல்லையில் உள்ள ‘அபே கம’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் தற்போது எதிர்பார்த்து உள்ளார்கள் எனவும் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு கடந்த அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வடக்கில் பெயரளவிலே அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கிடையாது என்றார்.

மேலும் தமிழ் கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக அரசியலமைப்பு உருவாக்கம் என்ற விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எனவே தமது ஆட்சி அமையுமிடத்து அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட மக்க ளுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று கூறினார்.