தமிழர் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் – கனடிய நாடாளுமன்றில் ஹரி

“பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” நடை பயணத்தில் “நீதிக்காக நடப்போருக்கு” ஆதவாக கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹரி ஆனந்தசங்கரி,   “தமிழ் மக்களின் எழுச்சியை தான் ஆதரிப்பதற்காகவே நான்  இங்கு உரையாற்றுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

அவரது சிறிய உரை பின்வருமாறு அமைகின்றது;

“இலங்கை அதன் 73 ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் வேளையில், “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” “நீதிக்காகநடப்போருக்கு” ஆதரவைத் தெரிவிப்பதற்காக நான் உரையாற்றுகிறேன். உயிர்தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் இந்தப்பயணத்தில் குடிசார் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் தலைவர்களும் இணைந்து கொண்டுள்ளார்கள்.

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப்புரிந்த போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரானகுற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கான பொறுப்புக்கூறலே அவர்களது நோக்கம்.
இலங்கைத்தீவு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து குற்றம்புரிவோர் தண்டிக்கப்படாத நிலை காணப்படுவதுடன், சட்டத்தின் ஆட்சியும் செயலிழந்துள்ளது.

இலங்கை அரசு கடந்த சில மாதங்களில் மட்டும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்து, போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்புவழங்கி, முஸ்லிம் சிறுபான்மையினரின் உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்ததுடன், குடிசார் அமைப்புக்கள் பலவற்றை இராணுவம் பொறுப்பேற்றும்உள்ளது.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டுமெனக் கடந்தவாரம் முடிவு செய்த மனிதஉரிமைகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஆணையாளர், இலங்கை தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் இன்றிச் செயற்பட அனுமதிக்கப்பட்டால் முன்னரைப்போன்ற அட்டூழியங்கள் மீண்டும் இடம் பெறுமென எச்சரித்துள்ளார்.

ஆகையால், இலங்கைத்தீவில் தமிழர்கள் சமாதானம், நீதி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்குச் சர்வதேச சமூகம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”