தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும்- சுமந்திரன்.

தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே  அனைவரும்  ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்  நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

 “ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ தேர்தல் கூட்டோ அல்ல. தமிழர்களிற்கு எதிரான விடயங்களில் அனைத்து தரப்புகளும் ஒன்று சேர வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்  மக்கள் மத்தியிலே இது தொடர்பான எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. எனவே அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதை அரசியலுக்காக செய்கிறோம் என்று சொன்னால் அதனை ஏற்கமுடியாது.

அத்துடன் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்து இன்று பேசினோம். மனித உரிமை பேரவை தனக்கு உரிய அதிகார வரம்புகளை பயன்படுத்தி தமது வார்த்தை பிரயோகங்களிற்கு ஊடாக சில முக்கியமான விடயங்களை இந்த வரைபிற்குள்ளே உள்டக்கியிருக்கிறது.  சிறீலங்கா தொடர்பான விடயம் சர்வதேச மேற்பார்வையின் கீழே தொடர்ச்சியாக இருக்கவேண்டும். அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான செயற்பாடுகளை இணை அனுசரணை நாடுகளுடன் சேர்ந்து எடுத்திருக்கிறோம்.

இந்த அரசாங்கத்தின் போக்கு தமிழர்களிற்கு எதிராக இருக்கிறது என்பது தெரிந்த விடயம். தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எமது மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றது. இருப்பை பாதிக்கின்றது. தொல்லியல் திணைக்களம் வனவளத் திணைக்களம் ஆகியன  முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என   கலந்துரையாடியிருந்தோம்.

 புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட குழுவிற்கு எமது பிரேரணைகளை முன்வைத்திருந்தோம். அதனடிப்படையில்   மூன்றாவது குடியரசு அரசியலைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால், அது தமிழ்தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வை உள்ளடக்கியதான வகையில் இருக்கவேண்டியதன் அவசியத்தை சம்பந்தன் ஐயா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதனால் நன்மை வருமா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது” என்றார்.