தமிழகத்தில் இருந்து படகில் தப்பி செல்ல முயன்ற அகதி கைது

தமிழகத்தில் இருந்து ஈழ அகதி ஒருவர் நாகப்பட்டினம் கடல் வழியாக  சிறீலங்காவுக்குத் தப்பி செல்ல இருப்பதாக கடலோர காவல் படை பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வேளாங் கண்ணி கடலோர காவல் படை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், ஆனந்தவடிவேல், ரவிச்சந்திரன் மற்றும் பொலிசார் வேளாங்கண்ணி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சோதனை செய்தபோது சந்தேகத்தின் பேரில் அங்கு தங்கி இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர், காஞ்சீபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் மூவரசம்பட்டு சுப்ரமணியன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ஜனார்த்தனன் (வயது 26) என்பதும், ஈழ அகதி என்பதும் தெரிய வந்தது. இவர் வேதாரண்யம் ஆர்காடு துறையை சேர்ந்த ஒருவரின் படகு மூலம் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வேளாங்கண்ணியில் இருந்து சிறீலங்காவிற்கு தப்பி செல்ல இருந்ததாக பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.