ட்ரம்ப், புட்டின் நேரடி சந்திப்பு இரத்து…

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் நடைபெறவிருந்த நேரடி சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, ட்ரம்ப் சந்தித்து பேசினார். அலாஸ்காவில் நடைபெற்ற இந்த பேச்சில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. போர் நிறுத்தம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அண்மையில் வாஷிங்டனில் ட்ரம்பை, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து புட்டினை நேரில் சந்திக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். இவர்களின் சந்திப்பு ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் நடப்பதாக இருந்தது.

இந் நிலையில், திடீரென இந்த சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறி உள்ளனர்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து பொதுவெளியில் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
போர் நிறுத்தத்துக்கு புட்டின் இணங்க மறுத்தாலேயே சந்திப்பை ட்ரம்ப் இரத்து செய்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.