ஞானசார துறவி உறுதிமொழி – கல்முனை போராட்டம் முடிவுக்கு வந்தது

கல்முனை பிரதேசசபையை தரமுயர்த்தக்கோரி மேற்கொள்ளப்பட்டுவந்த அகிம்சைப் போராட்டம் பொதுபால சேன கட்சியின் பொதுச் செயலாளர் ஞானசார துறவி வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து இன்று (22) முடிவுக்கு வந்துள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 16 நாட்களாக இடம்பெற்றுவந்த இந்த போராட்டத்தில் மதகுருக்கள், அரசியல்வாதிகள் ஆகியோரும் பெருமளவான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். காணி மற்றும் நிதி அதிகாரங்கள் செயலகத்திற்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதற்குரிய தீர்வினை எதிர்வரும் 3 மாதங்களில் கொண்டுவருவதாக சிறீலங்காவின் உள்த்துறை அமைச்சர் வஜீர அபயவர்த்தனா இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

பிரதேச சபையை தரமுயர்த்துவதற்கு எதிரான முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கான குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தரமுயர்த்துவதற்கு எதிராக முஸ்லீம் அரசியல்வாதிகள் போராட்டம் மேற்கொண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.