ஜெனிவாவில் புதிய பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இம்முறை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையைக் கொண்டுவரவுள்ள நாடுகளுடன் நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இந்தியாவுட னும் தொடர்ந்து பேசி வருகின்றோம்.

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்கவேண்டும். இந்தியாவில் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளையும் இந்திய மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயற்படும் என்றே நாம் நம்புகின்றோம்” என்றார்.