ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது பிரச்சினையல்ல, தமிழ் மக்களுக்கு தீர்வு என்ன? – கேள்வி எழுப்பிய சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது எமது பிரச்சினையில்லை, உங்களில் யார் களமிறங்குவீர்கள் என்பதை விட நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு முன்வைக்கும் தீர்வு என்ன? அரசியல் அமைப்பை நிறைவு செய்வீர்களா என்பதைக் கூறுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இரா.சம்பந்தன் நேரடியாக கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி தேர்தலிற்காக ஆதரவு திரட்டும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இச்சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.

கடந்த தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் கருத்துக்கள் குறித்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அது குறித்தே கலந்துரையாடப்பட்டிருந்தது. பிரதமரை சந்திப்பது மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் பிரதிநிதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை தனியே சந்தித்த காரணிகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதேவேளை தாம் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்கும் எந்தவொரு முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என்பதையும், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அனைத்து வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்றும் சம்பந்தன் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும்  தமிழர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முயற்சிக்கும் மற்றும் அதற்கான வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளரை ஆதரிக்க முடியும். அதேபோல் எமது மக்களின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்க முடியும் என்றும் கூறியதுடன், அன்று பிற்பகல் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதற்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று மாலை 3 மணியளவில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாராளுமன்ற பிரதமர் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிவமோகன் எம்.பி தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பிரதமருடன் அமைச்சர் ராஜித சேனரத்ன மட்டும் கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பில்  எந்தவொரு கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரிக்கும் தீர்மானம் எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை. நாம் முதலில் உங்களின் வேட்பாளர் யார் என்பதையே பார்க்கின்றோம். முதலில் பிரதான கட்சிகள் அனைத்துமே தமிழ் மக்களின் விடயத்தில் என்ன நிலைப்பாட்டில் உள்ளீர்கள் என்பதை பார்த்தே எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினையில் உங்களின் நிலைப்பாடு என்ன என்பதை கூறுங்கள் எனவும் வினவியுள்ளனர். இதற்கு பதில் தெரிவித்த பிரதமர் தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தீர்வுகளை நோக்கியே பயணிக்க விரும்புகின்றேன். நிச்சயமாக வாக்குறுதிகளை காப்பாற்றுவேன் என்றும் கூறினார்.