ஜனாதிபதி ரணிலை இரகசியமாகச் சந்தித்த மகிந்த – மொட்டு அணியின் நிலைப்பாட்டில் மாற்றம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இருவருக்கிடையில் இது தொடர்வில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னரும் இருவருக்குமிடையிலான இரகசிய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிலைப்பாடு, போட்டியிடும் கட்சி, சின்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே தின கூட்டத்தில் தம்மிக்க பெரேராவை முன்னிலைப்படுத்தி தங்களுடைய வேட்பாளருக்கான அறிகுறிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்திருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமெனவும் அவ்வாறு பொதுஜன பெரமுனவுடன் எவரும் இணையாவிட்டால் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றிவாய்ப்பு அதிகமெனவும் அரசியல் அரங்கில் பேச்சு எழுந்துள்ளது.

இதேவேளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா போட்டியிடாவிட்டால் அவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நியமன ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியின் ஒரு அங்கமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.