செட்டிக்குளத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

வவுனியா செட்டிக்குளத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ‘நாடும் தேசமும் உலகமும் அவளே’  எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணியும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
இதன் போது ஏழைப் பெண்களை சாதனை ஆக்குவோம், சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள், பெண்கள் நாட்டின் கண்கள் என்ற கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை தாங்கியவாறும் செட்டிக்குளம் பிரதேச மத்தியில் இருந்து ஊர்வலமாக சென்று செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் முடிவடைந்திருந்தது.
DSC06308 செட்டிக்குளத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
அதனை தொடர்ந்து செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 105  வயதுடைய செட்டிக்குளம் பிரதேசத்தின் மூத்த மூதாட்டி மாரியாய் என்பவருக்கு பிரதம விருந்தினர் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துல சேனவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன் செட்டிக்குளம் பிரதேசத்தின் சிறந்த பெண் சாதனையாளர்களிற்கான கௌரவிப்பும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
DSC06149 செட்டிக்குளத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் சுலோஸனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துல சேன, மாவட்ட செயலக திட்டப்பணிப்பாளர் திருமதி வில்வராஜா, பிரதி திட்டப்பணிப்பாளர் திருமதி பிறைசூடி, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் ஜெகதீஸ்வரன், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.