சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை – ஐ.நா. கவலை

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், “அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட. அது முழுவீச்சில் அமல்படுத்தப்படவில்லை. ஆங்காங்கே மோதல்கள் நடக்கின்றன. இருதரப்புமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. ஏனெனில் ஆயுத பலம் மூலம் நிச்சயமாக வெற்றி பெறலாம் என இரு தரப்புமே நம்புகிறது. இந்தச் சூழலில் சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சூடானின் கார்ட்டூம் நகரில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கூடமும் கலவரக்காரர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கே ஏதேனும் விபரீதம் நடந்தால் ஆராய்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகள் கசிவு ஏற்படலாம். இதனால் சூடானில் தொற்றுநோய் பரவலாம் என்று உலக சுகாதார நிறுவனத் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 முதல் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் சூடான் ஆயுதப் படைகளும் (எஸ்ஏஎஃப்), துணை இராணுவப் படையும் (ஆர்எஸ்எஃப்) கடந்த 15-ம் திகதி முதல் சண்டையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.