சுற்றுலா பயணிகளுக்கு 100 மில்லியன் ரூபா தேசிய காப்புறுதி திட்டம்

தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கான தேசிய காப்புறுதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து சிறீலங்கா ஒரு பாதுகாப்பு அற்ற நாடு என்ற தோற்றம் அனைத்துலக மட்டத்தில் ஏற்பட்டுள்ளதுடன் பல நாடுகள் பயண எச்சரிக்கைகளையும் தமது மக்களுக்கு விடுத்துள்ளன.

இதனால் சிறீலங்காவின் பிரதான வருமானத் துறையான சுற்றுலாத்துறை கடும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை தடுப்பதற்கு ஏதுவாக சிறீலங்கா அரசு தற்போது காப்புறுதி என்ற கவர்ச்சியான திட்டத்தை அறிவித்துள்ளது.