சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் மர்ம விதைகள்

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆரம்பித்தது சீனாவிலேயே. தற்போது உலகம் எல்லாம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அல்லாடும் வேளையில், சீனா தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்திருப்பதாகவும், அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அமெரிக்காவின் விவசாயத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற விதைகள் யாருக்கும் வந்தால், அதை பயிரிட வேண்டாம் என்றும், இது தொடர்பாக விவசாயத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த மர்மமான விதைகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல கனடாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் கருத்துத் தெரிவிக்கையில், இதில் உள்ள லேபல்கள் போலியானவை என்றும் அவற்றிலுள்ள தகவல்கள் தவறானவை என்றும் கூறுகின்றன.

அத்துடன் சீன செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது, இந்த போலி பார்சலை சீனாவிற்குத் திருப்பி அனுப்புமாறு சீனா அமெரிக்காவின் அஞ்சல் சேவையை கேட்டுள்ளது. அப்போது தான் இது குறித்து விசாரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.