சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்த பௌத்த மத குரு கொரோனாவால் உயிரிழப்பு

இலங்கை நாடாளுமன்றத்துக்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பௌத்த மதகுரு, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பத்தேகம சமித தேரர், கொரோனா தொற்று காரணமாக தனது 69ஆவது வயதில் காலமானார்.

மாத்தறையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிக் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்குத் தெரிவான இவர், 2001 தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியை வகித்து வந்தார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கள் தொடர்பில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வந்த இவர், சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.