சிறீலங்கா படையினரால் கைதான தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிக்கப்பட்டனர்

சிறீலங்கா கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 40 பேரை சிறீலங்கா அரசு விடுதலை செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலை சேர்ந்த 54 மீனவர்கள்,  கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிறீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிறீலங்கா கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக மீனவர்கள் 40 பேரை விடுவிப்பதுடன், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிப்படுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

நல்லிணக்க அடிப்படையில் மீனவர்கள் விடுவிக்கப்படுவதாகவும், நாளை இந்திய கடலோர பாதுகாப்பு படையினரிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் நாளை தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.