சிறிலங்காவிற்கான நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியை அமெரிக்கா வழங்குகின்றது

சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா,  நாசகாரி நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியினை அரபிக் கடலில் அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கன் சான்டியாகோவை தளமாகக் கொண்ட வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பல்களான USS Spruance மற்றும் USS Stockdale ஆகியன, கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இந்தோ – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கில் பணிகளை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் தளம் திரும்பியுள்ளன.

John C.Stennis  விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம் பெற்ற இந்த நாசகாரிக் கப்பல்களில் ஒன்றான,  USS Spruance தெற்கு அரபிக் கடலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வதாக அமெரிக்க தகவல் தெரிவிக்கின்றது.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படையினரின்   CARAT 2019 கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போதே, அரபிக் கடலில் இருதரப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கூட்டுப் பயிற்சிக்காக  USS Spruance என்ற நாசகாரி போர்க்கப்பல் கடந்த மாதம் 19ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.