சித்திரவதை, மனிதாபிமானமற்ற செயல்பாடுகள் தொடர்கின்றன – அமெரிக்கா அதிருப்தி

இலங்கையில் தொடரும் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற செயல்பாடுகள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், ஊடகவியலாளர்கள் கைது, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் குற்றங்கள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“2019 இல் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 2020 ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது. இருப்பினும் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் சர்வதேசத்தின் பார்வையையும் குறைந்த உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பையும் தடுத்ததாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கொரோனா தொற்றை காரணம் காட்டி செய்யப்பட்ட கட்டுப்பாடற்ற பிரசாரச் செலவுகள், அரசவளங்களைத் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற விடயங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதற்கு பொறுப்பேற்றுள்ள பொலிஸார் நவம்பர் 20 ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், குறிப்பாக வரையறுக்கப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு பொறுப்புக்களைக் கையாள கைது அதிகாரம் இல்லாமல் அழைக்கப்பட வழிவகுத்தது என சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து நீதித்துறை மற்றும் சுயாதீன அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் சிவில் சமூகக் குழுக்களும் பரவலாக விமர்சித்த நிலையிலும் ஒக்ரோபர் 22 இல் அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேறியது.

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்ற அமைப்புக்களுக்குரிய நியமனங்களை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதலின் போது கொண்டுவரப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழான அவசரகால நிலையால் பாதுகாப்புத் தரப்பினருக்கு கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டது. பின்னர் 2019 ஓகஸ்டில் குறித்த அவசரகால நிலை முடிவுக்கு வந்தது.

எவ்வாறாயினும், அவசரகால நிலை காலாவதியானதிலிருந்து ஒவ்வொரு மாதமும் பொதுப் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளை அனுப்பும் உத்தரவை அரசாங்கம் வர்த்தமானி செய்து, இராணுவத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்தியது. இறந்த தற்கொலை குண்டு தாரர்களுக்கு பொருள் ஆதரவு மற்றும் தொடர்ச்சியான விசாரணைகளுக்காக பலர் கைது செய்யப்பட்டபோதும் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்பாடுகள், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுதல், தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படுதல், ஊடகவியலாளர்கள் கைது, பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறுபான்மையினரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் குற்றங்கள் குறித்தும் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.