சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துங்கள்;அரச தலைவருக்கு கடிதம்

மேச்சற்தரைக் காணிகளில் அத்துமீறிய குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், சிறிலங்கா அரசு தலைவருக்குவிரிவான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈரலக்குளம் 201 கிராமசேவகர் பிரிவில் பெரியமாதவணை,மாதவணை மயிலத்தமடு,கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை 209  கிராமசேவர் பிரிவிலுள்ள சின்ன மாதவணை,மயிலத்தமடு போன்ற பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப் பிதேசங்களானது வனவள திணைக்களத்திற்குரியதும், மகாவலி வலயத்திற்கு உட்பட்டதுடன், இது மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட பிரதேசமும்மாகும். இப்பகுதியில் பல தடவைகள் பெரும்பான்மை இத்தைச் சோந்த சில தனிநபர்களால் குடியேற்றத்திற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. பலதரப்பில் இருந்து பேர்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் அவை தடுக்கப்பட்டன.

கடந்த ஒரு மாதமாக மீண்டும் குடியேற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு , அரசாங்கஅதிபர்,பிரதேச செயலாளர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள்,ஊடகத்துறையை ச்சார்ந்தவர்கள் மகாவலி பிரிவுகளைச் சேர்ந்தவர்களால்  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு காடு வெட்டுவதற்கான முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் இதில் சம்பந்தப்பட்ட 15ற்கு மேற்பட்டவர்கள் மீண்டும் காடுவெட்டிய பகுதிகளில் மழை காலங்களில் விவசாயச் செய்கையையும்,தற்காலிகக் கொட்டில்களையும் அமைப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது.

இப்பகுதியில்,திட்டமிட்டஒரு சிங்களக் குடியேற்றம் மறைமுகமாக சில மதத்தவர்களாலும்,அரசியல்வாதிகளாலும், மேற்கொள்ளப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றவா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது. பலதடவைகள் பொலனறுவை,அம்பாறை மாவட்டத்ததைச் சேர்ந்த ஒரு சிலரினால் இம் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிருவாகங்களை சிறப்பான முறையில் செய்து வருகின்ற நிருவாகிகளால் கால் நடைப்பண்ணையாளர்களின் ஓத்துழைப்புடன் பல தடவைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இப் பிரதேசமானது 2500ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை உள்ளடக்கியதாகும். அண்ணளவாக 200ற்கு மேற்பட்ட மாட்டுப்பட்டிகளை உள்ளடக்கிய 650ற்கு மேற்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களும்,15,000மேற்பட்ட கால்நடைகளும் உள்ள பகுதிகளாகும்.

பல மேட்டுநிலங்கள் இப் பிரதேசத்தில் உள்ளதால் மழைகாலங்களில் கால்நடைகளுக்கு பாதுகாப்பான இடமாக கருதப்படுகின்றது. மழைகாலங்களில் கால்நடைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு,பல வருடங்களாக கால்நடைகளுக்குரிய மேச்சற்தரையாக பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத் தக்கதாகும்.

இவைமட்டுமின்றி விவசாயக் கூட்டங்களிலும் உத்தியபூர்வமாக இவ் இடமே வருடாவருடம் கால்நடைகளுக்கென மேச்சற்தரைக்காக ஓதுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ் இடம் தொடர்பாக பொலனறுவை மாவட்ட வனவளத் திணைக்களம், மகாவலித்திட்டம் இரண்டு பிரிவுகளுக்கும் இது மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியாதலால் இப்பகுதிகளில் அத்துமீறிய நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லாட்சிக்கான விடயமாக இருக்காது.

எனவே மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறலை தடுப்பதற்கு நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு,நிரந்தரமாக கால்நடைகளுக்கான மேச்சற்தரையாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’  என அக்கடிதம் அமைந்துள்ளது.