ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கை பிரகடன உரையில் நாட்டுக்கு அத்தியாவசியமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிப்பதானது சர்வாதிகார போக்குக்கு வழிவகுக்கும் காரணியைப் போன்றுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வில் முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கை பிரகடனஉரை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை வினவிய போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
பாராளுமன்ற சுதந்திரத்தை வரையறுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முன்னோடியாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கை பிரகடன உரை அமைந்துள்ளது.
நிறைவேற்றதிகார முறையை மேலும் ஸ்திரமுடையதாக்கி சர்வாதிகார ஆட்சிக்கு செல்லவே முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது.
அதேவேளை அரசாங்கம் நாட்டுக்கு நன்மை தரும் வகையில் ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அதற்கு எமது முழுமையான ஆதரவினை வழங்குவோம். அதேபோன்று நாட்டுக்கு பாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டால் அவற்றுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிடுவோம்.
நாட்டுக்காக ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்தை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறான விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டுவதற்கு பாராளுமன்றத்தில் எமக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
எவ்வாறிருப்பினும் கட்சி மற்றும் இன,மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்கான சேவையை தொடர்ச்சியாக முன்னெ டுத்துச் செல்ல வேண்டும். இந்த பயணத்தின் போது அரசாங்கத்தின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் அதேவேளை நல்ல விடயங்களை ஊக்குவிப்பதற்கும் முன்வருவோம் என்றார்.