சனாதிபதி எங்களை ஏமாற்றிவிட்டார் – தம்பிராசா செல்வராணி

யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆட்சிக்கு வரும் அனைத்து சனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான தீர்வுகளை வழங்குவோம் என தெரிவத்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து சிம்மாசனத்தில் ஏறியதும் வாக்குறுதிகளை மறந்து தங்களின் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளின் ஈடுபட்டு வருவதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி குற்றம் சுமத்தியுள்ளார்.

அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்படி தெரிவித்து இருந்தார்.

அவர் மேலும் கூறுகையில்  

யுத்தம் முடிந்த நிலையில் எங்களின் கண் முன்னே இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்காக எமது உறவுகள் இன்னும் உயிருடன் தான் இருக்கின் றார்கள். இதனை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். இவ்வாறு உயிருடன் இருக்கின்ற எங்களின் உறவுகளை அரசு விடுதலை செய்ய வேண்டும் அவ்வாறு இல்லையேல் எமது போராட்டங்களும் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கும்.

சஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எமது காணாமல் போன உறவுகள் தொடர்பாக நல்லதொரு தீர்வு வழங்குவதாக எமக்கு வாக்குறுதி கொடுத்து சனாதிபதியாக இருக்கின்றார் ஆனால் சனாதிபதி எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகின்றார்.

இன்று ஒருசில காணாமல் போனவர்களின் உறவினர்கள் புதிதாக ஒரு சங்கத்தை அம்பாறை தம்பிலுவில் பகுதியில் தோற்றுவித்து அரசுடன் சேர்ந்து கூலிக்கு வேலை செய்து கொண்டு எமது போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த சங்கம் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரின் துணையுடன் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதுடன் காணாமல் போன உறவுகள் இனி திரும்பி வரப்போவதில்லை என்றும் அவர்களின் உறவுகளுக்கு நட்டஈடுகளை வழங்குமாறு ஊடகங்கள் வாயிலாக அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை வடக்கு, கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் மிக வன்மையாக கண்டிப்பதோடு காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லையென்று இவர்களுக்கு யார் தகவல் கொடுத்தது அப்படியானால் அரசு இவர்க ளுக்கு பணத்தைக் கொடுத்து இப்படி கூறச் செய்திருக்கின்றார்கள். எனவே இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் மேலும் தனது கருத்துக்களை ஊடக சந்திப்பின் போது தெரிவித்து இருந்தார்.