கோதாபாயவுக்கு ஆதரவு வழங்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் – சந்திரிகா

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் என்று தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள் கோதாபயவுக்கு ஆதரவு வழங்குவது ஏற்புடையதல்ல. இந்த செயற்பாடு சுதந்திர கட்சியை முழுமையாக காட்டி கொடுப்பதாகும்.

குறித்த கட்சியின் தலைமைத்துவத்தை கைவிட தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தால், நாம் தலைமைத்துவத்தை ஏற்று கட்சியை சிறந்த முறையில் கட்டியெழுப்பி இருப்போம்.

ராஜபக்ஷக்களின் சூழ்ச்சிகளின் காரணமாகவே இன்று கட்சி தற்போது சிதைவடைந்திருக்கிறது. எனவே சுதந்திர கட்சியை அதிகமாக நேசிப்பவர், மற்றும் அறிந்தவர் என்ற ரீதியில் கட்சி அழிந்துபோகும் நிலைமைக்கு இனியும் இடமளிக்க வேண்டாம் என்று கேட்டு;க்கொள்கின்றேன்