கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டியது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி பலியானவர்களின் எண்ணிக்கை 1000ஐயும் தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனா காரணமாக சீனாவில் தொடர்ந்து பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மொத்தம் 22 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இந்த வைரசை கட்டுப்படுத்தத் தவறியதால் மக்கள் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த வைரசிற்கு எதிராக சீன அரசு தோல்வியடைந்து விட்டது என்றுதான் கூறவேண்டும். அவர்கள் மற்ற உலக நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜிங்பிங் உதவி கேட்டு விட்டார்.

டிசம்பர் மாத இறுதியிலேயே இந்த வைரசின் தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசிற்குத் தெரிந்திருந்தது. ஆனால் அந்த விடயத்தை வெளியே தெரிவிக்காமல் அரசு மறைத்து விட்டது. இதனால் அந்நாட்டு அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். சமூகவலைத்தளங்களில் இந்த அரசை கவிழ்க்க வேண்டும், உடனடியாக அரசை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றார்கள். நாளுக்கு நாள் அரசிற்கு எதிராக அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 1016ஐ எட்டியுள்ளது. 1000 பேருக்கு அதிகமாக பலியானது அந்த நாட்டையே உலுக்கியுள்ளது. நேற்று (10) மட்டும் 104பேர் பலியானார்கள். இதனால் அந்நாட்டு அரசு பெரியளவில் அதிர்ச்சியடைந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 2146 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 42638பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது குிறப்பிடத்தக்கது.

முன்பு வுஹன் நகரத்தில் தான் இந்த வைரஸ் அதிகமாகப் பரவியது. இதனால் அந்நகரம் மொத்தமாக மூடப்பட்டது. ஆனால் தற்போது ஹுபே நகரத்தில் இந்த வைரஸ் வேகமாகப் பரவி பரவி வருகின்றது. நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தினால் ஹுபே நகரத்தில் 92பேர் பலியாகியுள்ளனர். அந்த நகரத்தையே இந்த வைரஸ் முடக்கிப் போட்டுள்ளது.