கொரோனா வைரஸ் சீன ஆய்வுகூடத்தில் தான் உருவானது – ஆராய்ச்சியாளர்கள்

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்திலுள்ள ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லி மெங் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹொங்கொங்கில் பணியாற்றியவரான இவர் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என்று கூறியதைத் தொடர்ந்து தலைமறைவானார். இதனையடுத்து அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

தற்போது லி மெங் பிரிட்டன் பத்திரிகை ஒன்றிற்கு கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில்,

“நான் நிமோனியா குறித்து சீனாவில் உள்ள ஆய்வகத்தில் 2019 டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அப்போது என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து அந்த ஆய்வகத்திலிருந்த மேற்பார்வையாளரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் உலக சுகாதார அமைப்பில் ஆலோசகராக இருக்கிறார். எனது முடிவுகளைக் கூறும்போது, அவர் சீன அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு சார்பாக நல்ல முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்த்தேன்.

ஆனால் அவர் என்னை அமைதியாக இரு. இல்லையென்றால், மாயமாகிப் போவாய் என்று எச்சரித்தார். என் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் அரசிற்கு பயந்தார்கள்.

கொரோனா வைரஸ் வூஹான் சந்தையில் உருவாகவில்லை. அங்கிருந்த ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது. நான் இந்த உண்மையை உலகிற்குச் சொல்லவில்லை என்றால் நான் நிச்சயம் வருத்தப்படுவேன்” என்று அவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனா வூஹானில் உள்ள மருத்துவமைனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங் என்பவர், கடந்த டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்பாகவே, சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூகவலைத்தளங்ளிலும் பகிர்ந்திருந்தார்.

ஆனால் அவரை இப்படியான வதந்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என சீன பொலிசார் எச்சரித்திருந்தனர். ஆனால் சீனாவில் வேகமாகப் பரவிய கொரோனா வைரஸால் லி வெனிலியாங்கின் உயிரும் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸை சீனாவே பரப்பியது என்றும், இந்த உண்மையை அது மறைக்கிறது என்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருவதும் அதை சீனா மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.