கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் – பிரித்தானிய உளவுத்துறை

அமெரிக்காவைத் தொடர்ந்து, தற்போது பிரித்தானிய உளவு அமைப்புகளும், கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்த செய்தி ‘தி சன்டே டைம்ஸ்’ என்கிற பிரித்தானிய பத்திரிகையில்  வெளியான பின், கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதை உலக சுகாதார அமைப்பு முழுமையாக விசாரிக்க வேண்டும் என பிரிட்டனின் தடுப்பூசி அமைச்சர் நதீம் சஹாவி கூறியுள்ளார்.

“வூஹானின் அமைதி பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. வருங்காலத்தில் நம்மை நாமே காத்துக் கொள்ளவும், என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவும் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என பிரித்தானிய மக்களவை உறுப்பினரான டாம் டக்கெட் கூறியுள்ளார்.

கொரோனா பரவுவதற்கு முன்பே மூன்று வூஹான் பரிசோதனைக் கூட ஆராய்ச்சியாளர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அது கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகளோடு ஒத்து இருந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்க உளவுத் துறை அறிக்கை கூறியது.

இந்த அறிக்கைக்குப் பிறகு, கொரோனா வைரஸ் எப்படி மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது என அமெரிக்க உளவு அமைப்புகள் அடுத்த 90 நாட்களுக்குள் கண்டு பிடிக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். சீனா ஆய்வகங்களில் இருந்து தான் கொரோனா பரவியது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு இவ்வாண்டின் தொடக்கத்தில் கூறியது நினைவுகூரத்தக்கது.

நன்றி – பிபிசி