கொரோனா வைரஸ்- சீன அதிபர் மருத்துவமனை சென்று ஆய்வு

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் அரிதான நிகழ்வாக அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமூடி அணிந்திருந்த ஷி ஜின்பிங், மருத்துவமனை மட்டுமின்றி, பெய்ஜிங்கில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றிற்கும் சென்றார். அப்போது அவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

2002-2003ஆம் ஆண்டுகளில் சீனாவில் பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸை விட வீரியம் மிக்க கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது, கொரோனா வைரஸுக்கு எதிராக இன்னும் “தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஷி வலியுறுத்தினார்.