கொரோனா தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுகின்றன;மறுக்கிறார் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையினர் தவறான தகவல்களையோ அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களையுயோ ஒருபோதும் வெளியிடமாட்டார்களென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவர்டன தெரிவித்தார்.

அவர்கள் உண்மைகளை மறைத்து தகவல்களை வெளியிடுவதாக சில ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அவர் அதற்கான அவசியம் அவர்களுக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

பரிசோதனைக் கூடங்களின் மூலம் உண்மையான தகவல்கள் கிடைத்ததும் உடனடியாக அத் தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் வழங்கப்படும் நிலையில் அவர்கள் மூலமே ஊடகங்களுக்கு செய்திகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தவறான தகவல்களை வெளியிடும் சில ஊடகங்களின் செயற்பாடுகளையே கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

பிரதேச மட்டத்தில் வைரஸ் தொற்று சந்தேக நபர்களை இனம் காண்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. அந்த நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறெனினும் அவ்வாறான சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருப்பார்களானால் அது தொடர்பில் அயலில் அவர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவிப்பது அவசியமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டில் மீண்டும் எலிக்காய்ச்சல் உருவாகி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. விவசாயிகள் இக்காலகட்டங்களில் மிக அர்ப்பணிப்புடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் மூலம் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா? அல்லது சுகாதார அமைச்சு என்ற வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை என்ன? என அவரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்குப் பதிலளித்த அவர்;

எமது நாட்டில் சில தொற்று நோய்கள் தொடர்பில் அவ்வப்போது தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தொற்று நோய்களை பொறுத்தவரையில் எமது நாட்டில் அவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன. விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அதற்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்