குருந்துார் மலையை படையினருடன் பார்வையிட்ட  பௌத்த துறவிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்துார் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த மலையின் அடிவாரத்தில் பொலிஸார் மற்றும் படையினர் கடமைகளில் நின்ற போதும் எந்தவித தடையும் இன்றி தேரர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளை அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கான அனுமதி பொலிஸாரால் மறுக்கப்பட்டுள்ளதுடன் ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குருந்துார் மலையினை பார்வையிடச் சென்ற பௌத்த துறவிகள் குழு, அங்குள்ள குருந்துார் குளத்தினையும் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.