மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான 35ம் கிராமம், கண்ணபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பொது மக்கள் குரங்கு தொல்லைகளினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
“கடந்த காலத்தில் நாங்கள் எல்லை கிராமத்திலிருந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இழப்புகளை கடந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும்போது இரவு வேளைகளில் சொத்துக்கள், பயிர்கள், உயிர்கள் ஆகியவற்றை யானைகள் அழிக்கின்றன. இதற்கான எந்தவிதமான தீர்வுகளும் இற்ற வரைக்கு கிடைக்காத நிலையே இருந்துவருகின்றது.
அத்துடன் கஷ்டப்பட்டு நிலக்கடலை சோளம் ஆகியவற்றைப் பயிரிட்டு பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் காட்டுக் குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம்மாக்கி வருவகின்றது” என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதமாக்கி செல்வதுடன் பாடசாலை செல்கின்ற சிறுவர்கள் முதியோர்களையும் காட்டுக்குரங்குகள் அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக பாடசாலை காலகட்டத்தில் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைக்கு பிள்ளைகள் தள்ளப்படுவதுடன் வீடுகளில் தனிமையில் இருக்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரவு வேளைகளில் யானைக்கும் பகல் வேளைகளில் குரங்குக்கும் அச்சப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக தெரிவிக்கும் அவர்கள், இதற்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.